செய்திகள்

ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் - ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு மீண்டும் விசாரணை நடத்தியது

Published On 2018-08-24 18:50 GMT   |   Update On 2018-08-24 18:50 GMT
ஏர்செல்-மேக்சிஸ் விவகாரத்தில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் மீண்டும் விசாரணை நடத்தியது. வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. #AircelMaxisCase
புதுடெல்லி:

ஏர்செல் நிறுவனத்தில், 2006-ம் ஆண்டு மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் என்ற வெளிநாட்டு நிறுவனம் 800 மில்லியன் டாலர் (அப்போதைய மதிப்பில் சுமார் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக) முதலீடு செய்வதற்கு எப்.ஐ.பி.பி. என்னும் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் அளித்தது.

ஆனால் ரூ.600 கோடி வரையிலான வெளிநாட்டு முதலீடுகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியம் ஒப்புதல் தர முடியும். அதற்கு அதிகமான முதலீடுகளுக்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழுதான் ஒப்புதல் தர முடியும்.

ஆனால் சட்டத்தை மீறி, ஏர்செல் நிறுவனத்தில் குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனம் ரூ.3 ஆயிரத்து 500 கோடிக்கு அதிகமாக முதலீடு செய்ய ஒப்புதல் தரப்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்தது.

2006-ம் ஆண்டு இந்த ஒப்புதல் தரப்பட்டபோது, மத்தியில் மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசில் ப.சிதம்பரம் நிதி மந்திரியாக இருந்தார்.

இந்த நிலையில் சட்டத்தை மீறி ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கு குளோபல் கம்யூனிகேஷன் ஹோல்டிங் சர்வீசஸ் நிறுவனத்துக்கு ஒப்புதல் வழங்கியது எப்படி என்பது பற்றி சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது. சி.பி.ஐ. வழக்கின் அடிப்படையில், அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் விசாரணை நடத்தி வருகிறது.

இதற்கு இடையே ஏர்செல்-மேக்சிஸ் உள்ளிட்ட 2 ‘ஜி’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்குகளின் விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மார்ச் மாதம் 12-ந் தேதி உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம் மீது அமலாக்கப்பிரிவு இயக்குனரகத்தின் சந்தேகப்பார்வை விழுந்து உள்ளது. இது தொடர்பாக அவரை கடந்த ஜூன் மாதம் வரவழைத்து, பல மணி நேரம் விசாரணை நடத்தியது. அந்த விசாரணையின் போது என்ன நடந்தது என்பது வெளியிடப்படவில்லை.

இருப்பினும் இது பற்றி ப.சிதம்பரம் அப்போது டுவிட்டரில் பதிவிடுகையில், “பாதிக்கு மேற்பட்ட நேரம் கேள்விகளுக்கான பதில்களை பிழையின்றி (கணினியில்) ‘டைப்’ செய்வதிலும், படித்துக்காட்டி அதில் கையெழுத்து பெறுவதிலும் கழிந்தது” என குறிப்பிட்டு இருந்தார்.


இந்த நிலையில் ப.சிதம்பரத்தை அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நேற்று மீண்டும் வரவழைத்தது. அவர் டெல்லியில் உள்ள அந்த அலுவலகத்தில் நேரில் ஆஜர் ஆனார். அவரிடம் சட்டவிரோத பண பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

ஏற்கனவே இந்த விவகாரத்தில், வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரியத்தின் அதிகாரிகளிடம் நடத்திய விசாரணையின்போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ப.சிதம்பரத்திடம் கேள்விகள் எழுப்பி பதில்கள் பெறப்பட்டதாகவும் தெரிய வந்து உள்ளது.  #AircelMaxisCase
Tags:    

Similar News