செய்திகள்

பாதுகாப்பை இழக்கின்றனவா பெண்கள் காப்பகங்கள்? - உ.பி.யில் மேலும் 26 பெண்கள் மாயம்

Published On 2018-08-09 14:39 GMT   |   Update On 2018-08-09 14:39 GMT
உத்தரப்பிரதேச மாநிலத்தில் காப்பகங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் 26 பெண்கள் மாயமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #UP #ShelterHomeProbe
லக்னோ:

உத்தரப்பிரதேச மாநிலம் டியோரியா பகுதியில் இயங்கி வந்த சிறுமிகள் காப்பகத்தில் சிறுமிகள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த காப்பகத்தில் இருந்து சிறுமி ஒருவர் தப்பிவந்து போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில் அந்த காப்பகத்தின் மேலாளர்கள் இருவர் கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரேட்டை நீக்கம் செய்து உத்தரவிட்ட முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், அனைத்து காப்பகத்திலும் சோதனை நடத்துமாறும் உத்தரவிட்டார்.

முதல்மந்திரியின் உத்தரவின் பேரில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காப்பகங்களிலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

அந்தவகையில், அசல்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காப்பகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் காப்பக குறிப்பேடில் பதிவு செய்யப்பட்ட 15 பெண்களில் 12 பேர் காணவில்லை என கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காப்பக நிர்வாகி கூறுகையில், அனைத்து பெண்களும் பணிக்கு சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். ஆனால், முறையான பதிவு ஏதும் காப்பக நிர்வாகிகள் சமர்ப்பிக்கவில்லை.

அதேபோல், அஸ்ட்புஜா நகர் பகுதியில் இயங்கிவந்த காப்பகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 14 பெண்கள் மாயமானது கண்டறியப்பட்டது. இந்த காப்பக நிர்வாகத்தினரும் முறையான ஆதாரங்கள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை.

இரண்டு காப்பகங்களில் இருந்தும் 26 பெண்கள் மாயமான நிலையில், விரைவில் அந்த பெண்கள் குறித்த தகவல்கள் முறையாக சமர்ப்பிக்கப்படவில்லையெனில் இந்த இரண்டு காப்பகங்களிலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #UP #ShelterHomeProbe
Tags:    

Similar News