செய்திகள்
மணிப்பூரில் முதல் மரண தண்டனை - போலீசாரின் துணிச்சலால் தண்டிக்கப்பட்ட காமுகன்
மணிப்பூர் மாநிலத்தில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது அம்மாநிலத்தின் முதல் மரண தண்டனையாகும். #DeathForChildRapist #Manipur
இம்பால்:
மணிப்பூர் மாநிலம் மரம் கவானம் கிராமத்தில் கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக யாரும் புகார் அளிக்காத நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தனர்.
2 நாட்களுக்கு பிறகு டேவிட் என்ற 21 வயது இளைஞனை போலீசார் கைது செய்தனர். அப்போதுதான் அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. டேவிட்டின் பெற்றோர் கொல்லப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்று பணத்தை கொடுத்து போலீசாரிடம் சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியுள்ளனர்.
ஆனால், போலீசார் துணிச்சலாக செயல்பட்டு சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பரிசோதனை செய்து, வழக்கில் 21 பேரை சாட்சிகளாக சேர்த்து அவர்களிடம் வாக்குமூலம் பெற்றது ஆகியவற்றை செய்தனர். எனினும், சாட்சிகள் தங்களது உயிர்களுக்கு ஆபத்து இருப்பதாக பல முறை பல்டி அடித்தனர்.
ஆனால், அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு கொடுத்து வழக்கை சிறப்பாக நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளித்த சிறப்பு நீதிபதி, டேவிட் குற்றவாளி என்றும் போக்ஸோ சட்டத்தின் கீழ் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பளித்தார்.
சுதந்திரத்திற்கு பிறகு மணிப்பூரில் வழங்கப்பட்டுள்ள முதல் மரண தண்டனை இதுவாகும். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்களே புகாரளிக்காமல் பயந்து ஒதுங்கிய நிலையில், போலீசார் தாமாக முன்வந்து வழக்கை விசாரித்து சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுத்துள்ளனர்.