செய்திகள்

வைகுண்டம் வழியாக வருபவர்கள் சாமியை தரிசிக்கலாம் - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

Published On 2018-07-24 22:09 GMT   |   Update On 2018-07-24 22:09 GMT
திருப்பதியில் நடைபெறும் கும்பாபிஷேகத்தின் போது வைகுண்டம் வழியாக வரும் பக்தர்கள் சாமியை தரிசிக்கலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதியில் அடுத்த மாதம் 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான அங்குரார்ப்பணம் 11-ம் தேதி மாலை நடைபெறுகிறது. பல்வேறு காரணங்களால் கும்பாபிஷேக நாட்களில் பக்தர்களை தரிசனத்துக்கு அனுமதிக்க முடியாது என்று தேவஸ்தானம் அறிவித்தது.

தேவஸ்தானத்தின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து, தேவஸ்தான நிர்வாகத்துக்கு ஆலோசனை வழங்கிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு தேவஸ்தான நிர்வாக முடிவை மறுசீலனை செய்து கும்பாபிஷேக நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்களையாவது தரிசனத்துக்கு அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதற்கிடையே, கும்பாபிஷேக நாட்களில் சாமி தரிசனம் செய்வதற்காக கோவிலுக்குள் அனுமதிப்பது பற்றிய தகவல் கருத்துக்கள், ஆலோசனைகள் ஆகியவற்றை பக்தர்கள் அனுப்பி வைக்கும்படி தேவஸ்தான நிர்வாகம் கேட்டுக் கொண்டது.

இந்நிலையில், இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்கலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி கோயில் கும்பாபிஷேகத்தின் போது இலவச தரிசனத்தில் செல்வோர் சாமியை தரிசிக்கலாம்.

ஆகஸ்ட் 11- ம் தேதி முதல் 16-ம் தேதி வரை கும்பாபிஷேக நாட்களில் வைகுண்டம் வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அன்றைய தினங்களில் விஐபி தரிசனம், ரூ.300 தரிசனம், மலைப்பாதை தரிசனம் உள்ளிட்டவை ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளது. #TirupatiTemple
Tags:    

Similar News