செய்திகள்

வாட்ஸ்அப் வதந்தியால் சாதுக்களை தாக்க குவிந்த கூட்டம் - ராணுவம் வந்து மீட்ட கதை

Published On 2018-07-06 10:23 GMT   |   Update On 2018-07-06 10:23 GMT
குழந்தை கடத்தல் வதந்திகள் பரவியதால் அசாமில் 3 சாதுக்களை அடிக்க நூற்றுக்கணக்கானோர் கூடிய நிலையில், ராணுவம் வந்து மூன்று பேரையும் மீட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.
 கவுகாத்தி:

நாடு முழுவதும் சமீபத்தில் குழந்தை கடத்தல் வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சில போலியான வீடியோக்களின் உதவியுடன் பரவும் இந்த வதந்தியை பலர் உண்மை என நம்பி சந்தேகத்துக்கு இடமான வகையில் காண்பர்வர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

கடந்த சில வாரங்களில் இது போன்ற தாக்குதலில் 10-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பல தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தில் உள்ள மஹுர் ரெயில் நிலையத்தில் நேற்று மாலை 3 சாதுக்கள் காவி உடையுடன் வந்துள்ளனர்.

அவர்கள் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் என யாரோ கிளப்பிவிட, அதை உண்மை என நம்பி அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சாதுக்களை தாக்க ரெயில் நிலையத்தில் குவிந்தனர். அப்போது, ரெயில் நிலையத்தில் இருந்த ராணுவ வீரர்கள் சிலர் கூட்டத்தை சமாளித்து மூன்று சாதுக்களையும் மீட்டு பாதுகாப்பாக கொண்டு சென்றனர். 

இதனை அடுத்து, மாவட்ட நிர்வாகம் சார்பில் இது போன்ற வதந்திகளை நம்பாதீர்கள் என பரப்புரை செய்யப்பட்டு வருகிறது. 
Tags:    

Similar News