செய்திகள்

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு - ப.சிதம்பரத்தின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த கெஜ்ரிவால்

Published On 2018-07-05 02:50 GMT   |   Update On 2018-07-05 02:50 GMT
டெல்லியில் ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானதையடுத்து, வழக்கில் ஆஜரான ப.சிதம்பரம் உள்ளிட்ட வழக்கறிஞர்களை நேரில் சந்தித்து முதல்வர் கெஜ்ரிவால் நன்றி தெரிவித்தார். #KejriwalThankChidambaram
புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு நேற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.



மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது.  இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்த தீர்ப்பு, டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி' எனமாநில  முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார்.

இந்நிலையில், துணைநிலை ஆளுநருக்கு எதிரான வழக்கில் சிறப்பாக வாதாடி சாதகமான தீர்ப்பை பெற்று தந்ததற்காக அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை சந்திக்க முதல்வர் கெஜ்ரிவால் முடிவு செய்தார். அதன்படி, அரசுத் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும் முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்தின் வீட்டுக்கு நேற்று இரவு சென்ற கெஜ்ரிவால், அவருக்கு நன்றி தெரிவித்தார். இதேபோல் கோபால் சுப்பிரமணியம், இந்திரா ஜெய்சிங், ராஜீவ் தவான் உள்ளிட்ட வழக்கறிஞர்களையும் சந்தித்து நன்றி தெரிவித்தார். #KejriwalThankChidambaram

Tags:    

Similar News