செய்திகள்
சொத்து தகராற்றில் தம்பி வீட்டுக்கு தீ வைத்த அண்ணன் - தாய் உள்பட 4 பேர் சாவு
சொத்து தகராறு காரணமாக தம்பி வீட்டுக்கு அண்ணன் வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்டவி பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திர தேவ்கடே (30). இவரது தாய் கஸ்தூரிபாய் (60), அவரது சகோதரர் ராகுலுடன் வசித்து வருகிறார். சகோதரர்கள் இருவருக்கும் இடையே நிலத்தை பங்கு பிரிப்பது தொடர்பாக ஏற்கனவே தகராறு இருந்துள்ளது.
இந்நிலையில், தனக்கு சொத்து கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராமச்சந்திரன் நேற்று இரவு ராகுல் வீட்டின் மீது கெரசினை ஊற்றி தீ வைத்தார். வீட்டின் உள்ளே படுத்திருந்த ராகுல், அவரது மனைவி சுஷ்மா மற்றும் அவரது மகன் ஆர்யன் (3) மற்றும் அவரது தாய் கஸ்தூரிபாய் ஆகியோர் தீயில் சிக்கினர்.
தனது உடலில் தீப்பற்றிய போதிலும், வீட்டை விட்டு வெளியே வந்த ராகுல் அங்கு நின்றிருந்த ராமச்சந்திரனை கட்டிப்பிடித்தார்.
தீயில் சிக்கி அலறிய அனைவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ராகுல், அவரது மனைவி, மகன் மற்றும் ராகுலின் தாய் ஆகியோர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர். ராகுல் வீட்டுக்கு தீ வைத்த ராமச்சந்திரன் படுகாயத்துடன் ஐ.சி.யு.வில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சொத்து தகராறு காரணமாக சகோதரர் வீட்டுக்கு வைத்த தீயில் சிக்கி தாய் உள்பட 4 பேர் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.