செய்திகள்
லைசன்ஸ் பெறுவதில் விதிமீறல் - ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்திய தலைவர் ஆஜராக சிபிஐ சம்மன்
லைசன்ஸ் பெறுவதில் விதிமீறலில் ஈடுபட்ட விவகாரத்தில் ஏர் ஏசியா நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் வெங்கடரமணன் ஆஜரான சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. #AirAsia #CBI
புதுடெல்லி:
சர்வதேச அளவில் விமான சேவைகளை இயக்குவதற்கான லைசென்ஸ் பெறுவதற்காக விதிகளை மீறியுள்ளதாக ஏர் ஏசியா விமான நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டோனி பெர்ணான்டஸ் மீது சிபிஐ சமீபத்தில் வழக்குப்பதிவு செய்தது.
ஏர் ஏசியா மலேசியாவின் குழும தலைமைச் செயல் அதிகாரி, டிராவல்ஃபுட் உரிமையாளர் சுனில் கபூர், ஏர் ஏசியா இந்திய பிரிவு இயக்குநர் ஆர். வெங்கடரமணன், விமானத்துறை ஆலோசகர் தீபக் தல்வார், சிங்கப்பூரைச் சேர்ந்த எஸ்என்ஆர் டிரேடிங் நிறுவனத்தின் இயக்குநர் ராஜேந்திர துபே மற்றும் சில அரசு உயர் அதிகாரிகளின் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் 6 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்திய பிரிவு தலைவர் வெங்கடரமணன் வரும் ஜூலை 3-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ இன்று சம்மன் அனுப்பியுள்ளது.
சர்வதேச அளவில் விமானங்களை இயக்குவதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனம் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் உள்நாட்டில் விமானங்களை இயக்கி இருக்க வேண்டும். அத்துடன் 20 விமானங்கள் இருக்க வேண்டும்.
இந்த விதிமுறைகளை மீறியதாகவும் அதேபோல அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரிய விதிமுறைகளை மீறியதாகவும் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.