செய்திகள்

நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை - டெல்லி ஐஏஎஸ் சங்கத்தினர் மறுப்பு

Published On 2018-06-17 13:25 GMT   |   Update On 2018-06-17 13:25 GMT
நாங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்பதில் துளியும் உண்மை இல்லை. அரசியலுக்காக நாங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறோம் என ஐஏஎஸ் சங்கத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். #KejriwalProtest #IASOfficersAssociation
புதுடெல்லி:

டெல்லி கவர்னர் அலுவலகத்தில் முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 6 நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் 3 டெல்லி அமைச்சர்களும் உள்ளனர். இந்த விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும் என சில அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இதற்கிடையில், தலைநக்ர் டெல்லியில் இன்று மாலை ஆம் ஆத்மி மந்திரிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் என அனைவரும் ஒன்று திரண்டனர். அவர்கள் அனைவரும் பிரதமர் மோடி வீட்டுக்கு பிரமாண்ட பேரணியாக சென்றனர். 

இந்நிலையில், டெல்லியில் உள்ள ஐஏஎஸ் சங்க உறுப்பினர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:



நாங்கள் வேலை நிறுத்தம் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரிகள் வேலை நிறுத்தம் செய்துள்ளார்கள் என்ற செய்தியே முதலில் தவறானது, அடிப்படையற்றது.

அனைத்து துறைகளும் அவர்களுடைய பணிகளை செய்கிறது. நாங்கள் சில நேரங்களில் விடுமுறை நாட்களில் கூட வேலை செய்கிறோம்.

எங்களுடைய பணியை நாங்கள் செய்து வருகிறோம். இதுபோன்ற செய்திகளால் நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம், அரசியல் காரணத்திற்காக எங்களை பயன்படுத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். #KejriwalProtest #IASOfficersAssociation
Tags:    

Similar News