செய்திகள்

கவர்னர் மாளிகை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணி: பிரதமர் மோடி தலையிட கெஜ்ரிவால் கடிதம்

Published On 2018-06-14 12:23 IST   |   Update On 2018-06-14 12:23:00 IST
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி கவனர் மாளிகையை நோக்கி ஆம் ஆத்மியினர் பேரணியில் ஈடுபட்டு வருவதால் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor

புதுடெல்லி:

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. டெல்லியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பகுதி நேர வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மந்திரிகளை அதிகாரிகள் சந்திக்க மறுப்பதாகவும், இதனால் அரசின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிடுமாறும் துணை நிலை கவர்னர் அனில் பைஜாலை கேட்டுக் கொண்டார். ஆனால் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொடர்ந்து மந்திரிகளை புறக்கணிக்கின்றனர்.

இந்த நிலையில் துணை நிலை கவர்னர் பைஜாலை கடந்த 11-ந் தேதி மாலை கெஜ்ரிவால் சந்தித்தார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தர விடுமாறும், ரேசன் பொருட்களை வீடுகளுக்கு சென்றே வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்குமாறும் கோரினார்.

பின்னர் கவர்னர் அலுவலகத்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார். அவருடன் துணை முதல்-மந்திரி மனிஷ் சிகோடியா, மந்திரிகள் கோயல்ராய், சத்யேந்தர் ஜெயின் ஆகியோரும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இன்று 4-வது நாளாக தொடர்ந்து கெஜ்ரிவாலும், அவருடன் இருக்கும் 3 மந்திரிகளும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கவர்னர் மாளிகையை நோக்கி பேரணி சென்றனர். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணிக்கு திரும்ப உத்தரவிட வலியுறுத்தி அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகி தனிக்கட்சி தொடங்கிய முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ஆம் ஆத்மி நிர்வாகிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

ஆம் ஆத்மியின் இந்த போராட்டத்துக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சுஜித்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம், லல்லுவின் ராஷ்டீரிய ஜனதா தளம் ஆகியவை ஆதரவு தெரிவித்து உள்ளன.

இதற்கிடையே இந்த வி‌ஷயத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்க்க வேண்டும் என்று கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஸ்டிரைக்கை முடித்து வைக்க கவர்னர் ஒத்துழைக்க மறுத்து வருகிறார் என்று குற்றம் சாட்டியும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார். #kejriwal #pmmodi #delhigovernor

Tags:    

Similar News