செய்திகள்
காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி

பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி - சட்டசபையில் பலம் 79 ஆக அதிகரிப்பு

Published On 2018-06-13 13:52 IST   |   Update On 2018-06-13 13:52:00 IST
கர்நாடக மாநிலம் ஜெயநகர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா வெற்றி பெற்றார். இதையடுத்து சட்டமன்றத்தில் காங்கிரசின் பலம் 79 ஆக அதிகரித்துள்ளது. #Jayanagar #JayanagarCounting #KarnatakaCongress
பெங்களூரு:

கடந்த மே 12-ந்தேதி கர்நாடக சட்டசபை தேர்தலின்போது பெங்களூரு ஜெயநகர் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் விஜயகுமார் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனால் அந்த தொகுதியில் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. கடந்த 11-ந்தேதி அங்கு தேர்தல் நடந்தது.

காங்கிரஸ் சார்பில் முன்னாள் மந்திரி ராமலிங்க ரெட்டியின் மகள் சவுமியாவும், பா.ஜனதா சார்பில் மரணம் அடைந்த விஜயகுமாரின் தம்பி பிரகலாத்தும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூரு எஸ்.எஸ்.எம்.ஆர்.வி. கல்லூரியில் இன்று காலை தொடங்கியது. மொத்தம் 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் தொடக்கத்தில் இருந்தே காங்கிரஸ் வேட்பாளர் சவுமியாரெட்டி முன்னணியில் இருந்தார்.

9 சுற்றுகள் வரை எண்ணப்பட்டபோது 15,000 வாக்குகள் வரை வித்தியாசம் இருந்தது. ஆனால் அடுத்த 5 சுற்றுகளில் வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது. பின்னர் ஓட்டு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் சவுமியா ரெட்டி 2,889 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.



காங்கிரஸ் வெற்றி பெற்றதால் சட்டசபையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 79 ஆக அதிகரித்தது. 2 முறை தக்க வைத்த தொகுதியை பா.ஜனதா இழந்துவிட்டது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜே.டி.எஸ். கட்சி ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.  #Jayanagar #JayanagarCounting #KarnatakaCongress

Tags:    

Similar News