செய்திகள்

குழந்தை கடத்தல் வதந்தியால் ஊரை சுற்றிப்பார்க்க வந்த இருவர் அடித்துக்கொலை

Published On 2018-06-10 05:44 GMT   |   Update On 2018-06-10 05:44 GMT
குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வரும் நிலையில் தற்போது, அசாமிலும் 2 சுற்றுலா பயணிகளை கிராம மக்கள் அடித்து கொன்றுள்ளனர். #childkidnappingpanic

கவுகாத்தி:

குழந்தை கடத்தல் பீதி நாடு முழுவதும் பரவி வருகிறது. இதனால் அப்பாவிகள் பலர் அடித்து கொல்லப்பட்டு வருகின்றனர். தொடக்கத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திராவை தொடர்ந்து இப்பீதி வட இந்தியாவில் பரவியது.

தற்போது வடகிழக்கு மாகாணங்களையும் ஆக்கிரமித்துள்ளது. மேகாலயா தலைநகர் ஷில்லாங்கில் குழந்தைகளை கடத்தும் ஒரு கும்பல் நடமாடுவதாக ‘வாட்ஸ் அப்’பில் பீதி பரவியது.

இந்த நிலையில் கவுகாத்தியை சேர்ந்த நிலோத் பால்தாஸ், அபிஜீத் நாத் ஆகிய 2 பேர் கர்பி ஆங்லாங் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதிக்கு சுற்றுலா சென்று இருந்தனர்.

இவர்கள் இருவரும் மும்பை மற்றும் கோவாவில் பணிபுரிந்தனர். நிலோத்பால் ஆடியோ என்ஜினீயராகவும், அபிஜீத்நாத் டிஜிட்டல் நிபுணராகவும் பணிபுரிந்தனர்.

இவர்கள் இருவரும் கர்பி மலையில் உள்ள பஞ்சூரி சாரிகான் என்ற கிராமத்துக்கு சென்று இருந்தனர். அங்கு காரை நிறுத்தி வழி கேட்டனர். அவர்களை குழந்தை கடத்தும் கும்பலை சேர்ந்தவர்கள் என கிராம மக்கள் சந்தேகப்பட்டனர். எனவே அவர்களது காரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவர்கள் இருவரையும் காரில் இருந்து வெளியேற்றினர். அவர்களை ரோட்டில் ‘தரதர’ வென இழுத்துச் சென்று கடுமையாக தாக்கினர். இதனால் ரத்த வெள்ளத்தில் துடித்த அவர்கள் நாங்கள் குழந்தை கடத்தும் கும்பல் அல்ல. அசாமை சேர்ந்தவர்கள்தான் என மன்றாடினர்.

இருந்தும் விடாமல் சுமார் 250 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து தாக்கியது. தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். கும்பலிடம் இருந்து 2 பேரையும் மீட்டனர். அவர்களில் ஒருவர் அதே இடத்தில் உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மற்றொருவரை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்துள்ளனர். இந்த தகவலை கர்பி ஆஸ்லாஸ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜி.வி. சிவபிரசாத் தெரிவித்தார்.

இத்தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த அசாம் முதல் மந்திரி சர்பானந்தா கோனோவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் சமூக வலை தளங்களை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளார். #childkidnappingpanic 

Tags:    

Similar News