செய்திகள்
சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்தார் மாயாவதி
முலாயம் சிங், அகிலேஷ் யாதவை தொடர்ந்து உ.பி. முன்னாள் முதல் மந்திரி மாயாவதி தான் வசித்து வந்த அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். #Mayawati #residence
லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் கடந்த சமாஜ்வாதி கட்சி ஆட்சியின் போது முன்னாள் முதல்வர்களுக்கு அரசு பங்களா உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தை கடந்த 7-ம் தேதி சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இதனை அடுத்து, முன்னாள் முதல்வர்கள் 15 நாட்களில் அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என அம்மாநில அரசு நோட்டீஸ் அனுப்பியது.
பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட மற்றொரு வீடு கிடைப்பது கடினம் என்பதால் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல் மந்திரி முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது மகன் அகிலேஷ் யாதவ் ஆகியோர் மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தனர். ஆனால், மாநில அரசு அதற்கு பதிலளிக்காத நிலையில், இன்று இருவரும் இதே கோரிக்கையுடன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.
அரசு பதவிகளில் இல்லாதவர்கள் தாங்கள் வசித்து வரும் வீடுகளை உடனடியாக காலி செய்தாக வேண்டும் என சுப்ரீம் கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்தது.
இதையடுத்து, அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் தங்களது அரசு வீடுகளை இன்று காலை காலி செய்தனர். மிக முக்கியமான பிரமுகர்கள் (VVIP) தங்கும் அரசு விருந்தினர் விடுதியில் அவர்கள் தற்காலிகமாக தங்கியுள்ளனர்.
இதைதொடர்ந்து, முன்னாள் முதல் மந்திரி மாயாவதியும் 13-ம் எண் கொண்ட மால் அவென்யூ அரசு பங்களாவை விட்டு இன்று மாலை வெளியேறினார். அந்த வீட்டை மறைந்த தலைவர் கன்சிராமின் நினைவு இல்லமாக ஆக்கிவிட்டதாக முன்னர் குறிப்பிட்டிருந்த மாயாவதி, அங்கிருந்து வெளியேறியதற்கான கடிதத்தை நினைவு இல்ல பொறுப்பாளரிடம் அளித்தார். அந்த வீட்டை பாதுகாக்கும் பொறுப்பு இனி மாநில அரசை சேர்ந்தது என தெரிவித்துள்ளார். #Mayawati #residence