செய்திகள்

லைசென்ஸ் பெற முறைகேடு - ஏர் ஏசியா அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை

Published On 2018-05-29 10:28 GMT   |   Update On 2018-05-29 10:28 GMT
அரசு அதிகாரிகளை சரிகட்டி, சர்வதேச விமானச்சேவை லைசென்ஸ் பெற்றதாக ஏர் ஏசியா நிறுவன தலைமை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் 6 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
புதுடெல்லி:

மலேசியா நாட்டின் குறைந்த கட்டண விமானச்சேவை நிறுவனமான ஏர் ஏசியா, பெங்களூரு நகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 2013-ம் ஆண்டு இந்தியாவில் விமானச் சேவையை தொடங்கியது. முதலில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு இடையில் விமானச் சேவையை தொடங்கிய இந்த நிறுவனத்தின் 49 சதவீதம் பங்குகள் டாட்டா சன்ஸ் நிறுவனத்திடம் உள்ளது.

உள்நாட்டு விமானச் சேவையை தொடர்ந்து வெளிநாட்டு விமானச் சேவைகளையும் தொடங்கியுள்ள ஏர் ஏசியா கவர்ச்சிகரமான கட்டண சலுகைகளை அவ்வப்போது வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது.

இந்நிலையில், வெளிநாட்டு விமானச் சேவைக்கான லைசென்ஸ் பெறுவதற்கு முறைகேடான வழிகளை இந்நிறுவனம் பயன்படுத்தியதாக சமீபத்தில் தெரியவந்தது.

மத்திய அரசில் உள்ள உயர் அதிகாரிகளை பல்வேறு வழிகளில் சரிகட்டி சர்வதேச விமானச் சேவைக்கான லைசென்ஸ் வழங்குவதற்கான விதிமுறைகளை தளர்த்தியும், மாற்றியும் இந்த முறைகேடு நடந்துள்ளதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

குறிப்பாக, இந்த லைசென்ஸ் பெறுவதற்கான 20 விதிமுறைகளில் ஐந்தாவது விதிமுறையில் இந்தியாவில் இருந்து சர்வதேச விமானச் சேவையை தொடங்க வேண்டுமானால், இந்திய விமான போக்குவரத்து துறையில் ஐந்தாண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

டோனி பிரான்சிஸ்

மேலும், அந்த நிறுவனத்துக்கு சொந்தமாக குறைந்தபட்சம் 20 விமானங்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசு அதிகாரிகளின் உதவியுடன் இந்த விதிகளை எல்லாம் மீறி ஏர் ஏசியா சர்வதேச லைசென்ஸ் பெற்றுள்ளது சி.பி.ஐ. விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து, ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை செயல் இயக்குனர் (சி.இ.ஓ.) மலேசியா நாட்டை சேர்ந்த டோனி பிரான்சிஸ், ஏர் ஏசியா நிறுவனத்தின் இயக்குனர் ஆர்.வெங்கடராமன், விமானச்சேவை ஆலோசகர் தீபக் தல்வார் மற்றும் பெயர்கள் வெளியிடப்படாத அரசு அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.

டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் உள்ள ஏர் ஏசியாவுக்கு சொந்தமான 6 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். #AirAsiabookedby #AirAsiaCEO #TonyFernandes
Tags:    

Similar News