செய்திகள்

பெங்களூரு சிறையில் சசிகலா சாதாரண கைதிபோல நடத்தப்படுகிறார் - மகளிர் ஆணைய தலைவி

Published On 2018-05-29 10:06 GMT   |   Update On 2018-05-29 10:06 GMT
பெங்களூரு சிறையில் சசிகலா சாதாரண கைதிபோல நடத்தப்படுகிறார் என்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தபின் மகளிர் ஆணைய தலைவி கூறினார்.
பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

சிறை விதிமுறைகளை மீறி அவருக்கு சிறையில் சிறப்பு சொகுசு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும், அதற்காக 2 கோடி ரூபாய் லஞ்சம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா கூறினார்.

இந்த திடுக்கிடும் தகவல் கர்நாடகம் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து உயர்மட்ட விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி விஜய்குமார் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி கர்நாடக அரசுக்கு அறிக்கை தெரிவித்தார். இதில் சசிகலாவுக்கு சிறையில் சலுகைகள் வழங்கப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறி இருந்தனர்.

ரூ.2 கோடி லஞ்சம் விவகாரம் குறித்து கர்நாடக மாநில ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி பாய் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அங்கு அடைக்கப்பட்டு உள்ள பெண் கைதிகளின் நிலை குறித்து விசாரித்தார். அதன் பிறகு சிறையை விட்டு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சசிகலாவின் அறையை சென்று பார்வையிட்டேன். அவர் சாதாரண கைதி போன்றுதான் நடத்தப்படுகிறார். உயர்தர வசதிகள் எதுவும் செய்து கொடுக்கப்படவில்லை.

சில கைதிகள் சிகிச்சை பெறுவதற்கு பிரத்யேக மருத்துவமனை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். என்னுடைய ஆய்வு பற்றி மாநில அரசிற்கு கடிதம் எழுத இருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News