செய்திகள்

கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி நாளை மோடியை சந்திக்கிறார்

Published On 2018-05-27 06:00 GMT   |   Update On 2018-05-27 06:00 GMT
கர்நாடக முதல்-மந்திரியாக பதவியேற்றுள்ள குமாரசாமி நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார். #KarnatakaCMKumaraswamy #PMModi

பெங்களூர்:

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி அமைவதை தடுத்த ஜே.டி.எஸ். தலைவர் குமாரசாமி காங்கிரஸ் ஆதரவுடன் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

காங்கிரஸ் ஜே.டி.எஸ். இடையே இலாகா ஒதுக்கீட்டில் இழுபறி ஏற்பட்ட நிலையில் காங்கிரசார் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை நாளை சந்தித்துப் பேசுகிறார்கள்.

இதற்கிடையே முதல்- மந்திரி குமாரசாமியும் நாளை டெல்லி செல்கிறார். காலை 11.30 மணிக்கு அவர் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுகிறார். அப்போது பிரதமர் பதவியில் 4 ஆண்டுகள் நிறைவு செய்தமைக்கு வாழ்த்து தெரிவிக்கிறார். பிரதமர் மோடியை குமாரசாமி சந்திப்பது தொடர்பான தகவலை பெங்களூரில் முதல்-மந்திரி அலுவலக அதிகாரிகள் வெளியிட்டனர்.


பிரதமருடனான சந்திப்பின் போது கர்நாடக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு பற்றி பேச்சு நடத்துகிறார்.

தொடர்ந்து மத்திய எரி சக்தி துறை மந்திரி பியூஸ் கோயலை குமாரசாமி சந்திக்கிறார். கர்நாடகத்தில் தற்போது கடுமையான மின்சார தட்டுப்பாடு நிலவுகிறது. இதை சமாளிக்க அனல் மின் நிலையங்களுக்கு கட்டுப்பாடு இல்லாமல் நிலக்கரி கிடைக்க தேவையான ஆலோசனை நடத்துகிறார்.

காங்கிரஸ் தலைவர்கள் ராகுலைசந்திக்கும் நிலையில் குமாரசாமி பிரதமர் மோடியை சந்திப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரசாமி ஏற்கனவே தேர்தலில் வெற்றி பெற்றதுமே காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுலை சந்தித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #KarnatakaCMKumaraswamy #PMModi

Tags:    

Similar News