செய்திகள்

பாகிஸ்தான் தொடர் தாக்குதல் - காஷ்மீர் எல்லையில் 100 கிராமங்களை விட்டு மக்கள் வெளியேற்றம்

Published On 2018-05-23 09:25 GMT   |   Update On 2018-05-23 09:25 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் எல்லைக்கோட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து நடத்திவரும் அத்துமீறிய தாக்குதலுக்கு பயந்து எல்லையோரத்தில் வசித்த சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். #Pakistanshelling

ஜம்மு:

காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தினர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.  



அதைத்தொடர்ந்து ஆனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தை மீது சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய குண்டு எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மக்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது. இந்த தாக்குதல்களில் இதுவரை ஐந்து பேர் உயிரிழந்த்தோடு பலர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, எல்லையோர பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் அத்துமீறிய தாக்குதலுக்கு பயந்து எல்லையோரத்தில் உள்ள 100 கிராமங்களை சேர்ந்த சுமார் 76 ஆயிரம் பேர் வெளியேறியுள்ளனர். குறிப்பாக ஆர்னியா பகுதியில் இருந்து மட்டும் சுமார் 18,500 பேர் வெளியேறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள கிராமங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது. #Pakistanshelling
Tags:    

Similar News