செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் வெடிகுண்டு தாக்குதலில் 6 பேர் காயம்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஆனந்த்நாக் மாவட்டத்தில் இன்று நடந்த வெடிகுண்டு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்தனர். #JammuKashmir #Anantnaggrenadeattack
ஸ்ரீநகர்:
காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.
இந்நிலையில், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பிஜ்பேஹரா பகுதியில் இன்று ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வாகனத்தை மீது சிலர் குண்டுவீசி தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீசிய குண்டு எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த மக்கள் கூட்டத்தில் விழுந்து வெடித்தது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒரு பெண் உட்பட அப்பாவி பொதுமக்கள் ஆறு பேர் காயமடைந்திருப்பதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, தாக்குதல் நடத்தியவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #JammuKashmir #Anantnaggrenadeattack