செய்திகள்

ஜம்மு-காஷ்மீரில் தொடரும் அத்துமீறல்: பாக். ராணுவ தாக்குதலில் 4 பேர் உயிரிழப்பு

Published On 2018-05-23 05:48 GMT   |   Update On 2018-05-23 06:07 GMT
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #JammuKashmir #PakistanRangers #KathuaAttack

ஸ்ரீநகர்:

காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் அமலில் இருக்கும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.

கடந்த ஒரு வார காலமாக பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதல்கள் தீவிரமடைந்து வருகிறது. இப்படி கடந்த 15-ந் தேதி முதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதல்களில் எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் 2 பேர், பொதுமக்களில் 4 பேர் உயிர் இழந்து உள்ளனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்திருக்கிறார்கள்.

நேற்று பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் சிறப்பு போலீஸ் அதிகாரி உள்பட 6 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பல்லன்வாலா செக்டாரில், பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலில், வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த 8 மாத ஆண் குழந்தை பலியானது.

இந்நிலையில், தொடர்ந்து 9-வது நாளாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா-ஜம்மு செக்டாரில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் ஆர்.எஸ்.பொரா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்தன.  #JammuKashmir #PakistanRangers #KathuaAttack
Tags:    

Similar News