செய்திகள்
தாஜ்மகால் வளாகத்தில் குரங்கு தாக்கி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயம்
தாஜ்மகால் வளாகத்தில் குரங்குகள் தாக்கியதில் இரண்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் காயம் அடைந்துள்ளனர். #TajMahal
லக்னோ :
ஆக்ரா நகரில் உள்ள சுற்றுலா தலமான தாஜ்மகாலில் கடந்த சில மாதமாக நாய்கள் மற்றும் குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. தாஜ்மகாலை பார்வையிட வரும் சுற்றுலா பயணிகளையும் அவை அவ்வப்போது பயமுறுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்று தாஜ்மகாலை பார்வையிட வந்த பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகளை குரங்குகள் கூட்டமாக தாக்கியது.
அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் குரங்குகளிடம் இருந்து காப்பாற்றினர். குரங்குகள் தாக்கியதில் அவர்களுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
தாஜ்மகால் வளாகத்தில் அதிகரித்து வரும் குரங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த ஆக்ரா நகராட்சியிடம் பலமுறை முறையிடப்பட்டுள்ளது. ஆனால் நகராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குரங்குகளுக்கு மொத்தமாக ஆண்மை நீக்கம் செய்தால் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும் என பொதுநல அமைப்பு யோசனையை முன்வைத்தது.
ஆனால் போதிய நிதிபற்றாக்குறை காரணம் காட்டி பொதுநல அமைப்பின் யோசனையையும் மாநகராட்சி தட்டிகழித்து விட்டது. அதிகரித்துவரும் குரங்குகளின் எண்ணிக்கையால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாது தாஜ்மகாலை சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளும் அதிகளவு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #TajMahal