செய்திகள்

மணிப்பூரிலும் போர்க்கொடி - ஆட்சியமைக்க உரிமை கோரி கவர்னரை சந்திக்க காங். முடிவு

Published On 2018-05-17 16:00 GMT   |   Update On 2018-05-17 17:51 GMT
கர்நாடகாவில் தனிப்பெரும் கட்சி என்பதால் பாஜக ஆட்சியமைக்க கவர்னர் அழைத்துள்ளதாக கூறப்பட்ட நிலையில், மேகாலயாவில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது. #KarnatakaCM #ManipurCongress
இம்பால் :

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், ஆட்சியமைக்க தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. அதிகபட்சமாக பாஜக 104 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 78 இடங்களிலும், மஜத 37 இடங்களிலும் வென்றன.

பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மஜத ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. ஆனால், தனிப்பெரும் கட்சி நாங்களே எனவே எங்களையே ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என எடியூரப்பா அம்மாநில கவர்னர் பாஜுபாய் வாலாவை சந்தித்தார்.

குமாரசாமி மற்றும் காங்கிரஸ் தலைவர்களும் 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கடிதத்துடன் கவர்னரை சந்தித்தனர். திடீர் திருப்பமாக நேற்றிரவு எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்தார். இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.



இந்நிலையில், தனிப்பெரும் கட்சி என்று கூறி கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோரியது போல, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ஒக்ரம் இபோபி சிங் தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,கர்நாடகாவில் காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியை ஆட்சியமைக்க அழைக்காமல் பெரும்பான்மை இல்லாத பாஜகவை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை போராட்டம் நடத்தப்படும் என கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மணிப்பூர் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், அதிக இடங்களை வைத்துள்ள கட்சி ஆட்சியமைக்கலாம் என அப்போது விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மணிப்பூரில் நாங்களே தனிப்பெரும் கட்சி எனவே நாளை மதியம் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளோம்.

கடந்த முறை தனிப்பெரும் கட்சியாக இருந்தும் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு எதன் அடிப்படையில் வாய்ப்பு மறுக்கப்பட்டது? என்பதற்கான விளக்கத்தையும் கவர்னர் ஜக்திஷ் முக்ஹியிடம் கேட்க உள்ளோம் என அவர் தெரிவித்தார்.

மணிப்பூர் சட்டசபைக்கு கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 28 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சியை புறம் தள்ளிவிட்டு 21 தொகுதிகளை மட்டுமே வெற்றி பெற்ற பாஜகவை ஆட்சி அமைக்க அப்போதைய மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா அழைப்பு விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
#KarnatakaCMRace #ManipurCongress
Tags:    

Similar News