செய்திகள்

வட மாநிலங்களை தாக்கிய புழுதிப்புயலுக்கு 80 பேர் பலி - 136 பேர் படுகாயம்

Published On 2018-05-14 16:24 GMT   |   Update On 2018-05-14 16:24 GMT
உ.பி., மேற்கு வங்கம், ஆந்திரா உட்பட வட மாநிலங்களில் ஏற்பட்ட புழுதிப்புயலுக்கு 80 பேர் பலியாகியதோடு, 136 பேர் படுகாயமடைந்துள்ளனர். #duststrom

புதுடெல்லி:

வடமாநிலங்களில் நேற்று சூறாவளிப்புயல் தாக்கியது. இதையடுத்து இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. தலைநகர் டெல்லியில் நேற்று மாலை மழை மற்றும் பலத்த சூறைக்காற்றுடன் பல பகுதிகளில் புழுதிப்புயல் தாக்கியது. இதன் காரணமாக இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமானங்களின் வருகை, புறப்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டன. பல விமானங்கள் மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டன.

அதேபோல், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரப்பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், புழுதிப்புயலும் வீசி மக்களை நிலைகுலையச் செய்தன. இதில் பெருமளவில் உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் 24 மாவட்டங்கள், மேற்கு வங்கத்தின் 6, ஆந்திராவின் 3, டெல்லியின் 2, உத்தரகாண்டின் 1 மாவட்டங்களில் புழுதிப்புயல், மின்னல் தாக்கியுள்ளது.



இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில் 51, மேற்குவங்கத்தில் 14, ஆந்திரப் பிரதேசத்தில் 12, டெல்லி 2, உத்தரகாண்டில் 1 ஆகியோர் பலியாகி உள்ளதாகவும், 136 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #DustStormUP
 
முன்னதாக உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, உத்தரகாண்ட், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் புயல் பாதிப்பு ஏற்பட்டது. இதில் 134 பேர் பலியாகினர். 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஆக்ரா மாவட்டத்தில் மட்டும் 80 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மே 9ல் உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புயல் தாக்கியதில் 18 பேர் பலியாகினர். 27 பேர் படுகாயமடைந்தனர். #duststrom
Tags:    

Similar News