செய்திகள்

கர்நாடக தேர்தலில் 36.8 சதவீதம் வாக்குப்பதிவு

Published On 2018-05-12 13:53 IST   |   Update On 2018-05-12 13:53:00 IST
கர்நாடக சட்டசபை தேர்தலில் இன்று பிற்பகல் ஒருமணி நிலவரப்படி 37 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. #KarnatakaElections2018
பெங்களூரு:

கர்நாடக சட்டசபையின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைவதால் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
ஆண் வாக்காளர்கள் 2.52 கோடி, பெண் வாக்காளர்கள் 2.44 கோடி, 4,552 மாற்றுப்பாலினத்தவர்கள் என மொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதும் 58.008 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சுமார் 3.5 அரசு பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 2600 வேட்பாளர்களின் தலைவிதியை நிர்ணயம் செய்யும் இந்த தேர்தலில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றுவருகிறது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களித்து வருகின்றனர்.

முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தரமனாகுண்டி கிராமத்தில் வாக்களித்தார். பா.ஜ.க. முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா ஷிகர்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். மத்திய மந்திரியும் பா.ஜ.க. முக்கிய தலைவருமான சதானந்த கவுடா புத்தூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார். ஹசன் மாவட்டம் ஹோலிநரசிபுரா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் முன்னாள் பிரதமருமான தேவே கவுடா மனைவி சென்னம்மாவுடன் வந்து ஓட்டு போட்டார்.



110 வயதை கடந்த சித்தகங்கா மடத்தலைவர் ஸ்ரீ சிவகுமார சுவாமிஜி மடத்தை ஒட்டியுள்ள வளாகத்தில் வாக்களித்தார்.

காலை 11 நிலவரப்படி தக்சின கன்னடம் மற்றும் உடுப்பி மாவட்டங்களில் அதிகபட்சமாக 31 சதவீதம் வாக்குகள் பதிவாகின. பெங்களூரு புறநகர் பகுதியில் குறைந்தபட்சமாக 17 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.

சில இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி ஏற்பட்டதால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மற்றபடி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பிற்பகல் 1 மணி நிலவரப்படி 36.8 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தெரியவந்துள்ளது. #KarnatakaElections2018
Tags:    

Similar News