செய்திகள்

திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் தேவ் பதவியேற்றார்- மோடி பங்கேற்பு

Published On 2018-03-09 07:23 GMT   |   Update On 2018-03-09 07:23 GMT
திரிபுராவின் முதல் பா.ஜ.க. முதல்வராக பிப்லப் குமார் தேவ் இன்று பதவியேற்றார். விழாவில் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். #Tripura #BJP
அகர்தலா:

வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பா.ஜ.க. 35 தொகுதிகளை கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான திரிபுரா பழங்குடியின மக்கள் முன்னணி (ஐ.பி.எப்.டி.) 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருந்த இடதுசாரி கூட்டணி வெறும் 16 தொகுதிகளை மட்டுமே பெற்றருது.

இதையடுத்து பா.ஜ.க. மாநிலத் தலைவரான பிப்லப் குமார் தேவை முதல்வராக தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கட்சியின் சட்டமன்ற குழு தலைவராக அவர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சியமைக்குமாறு அவருக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் நேற்று அழைப்பு விடுத்தார்.


அதன்படி, அகர்தலாவில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. விழாவில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பிப்லப் குமார் பதவியேற்றார். துணை முதல்வராக ஜிஷ்ணு தேவ் பர்மான் பதவியேற்றார். அமைச்சர்களும் பதவியேற்றன. அவர்களுக்கு மாநில ஆளுநர் ததகதா ராய் பதவிப் பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.


பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில், பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, ராஜ்நாத் சிங் மற்றும் மாநில நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். முன்னாள் முதல்வர் மாணிக் சர்க்கார் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர்களும் விழாவில் பங்கேற்றனர். #Tamilnews
Tags:    

Similar News