செய்திகள்

ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி பி.கே.துங்கன் விடுதலை

Published On 2017-12-28 10:53 IST   |   Update On 2017-12-28 10:53:00 IST
21 ஆண்டுகளாக நடந்த ஊழல் வழக்கில் இருந்து முன்னாள் மத்திய மந்திரி பி.கே.துங்கனை விடுதலை செய்து சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு அளித்தார்.
புதுடெல்லி:

மத்தியில், நரசிம்மராவ் தலைமையிலான அரசில் நகர்ப்புற வளர்ச்சித்துறை இணை மந்திரியாக இருந்தவர் பி.கே.துங்கன். இவர், அருணாசலபிரதேச முதல்-மந்திரியாகவும் பதவி வகித்துள்ளார். இவர் மத்திய மந்திரியாக இருந்தபோது, அரசு குடியிருப்புகளை முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக 1996-ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது.

இதில் ஆதாயம் அடைந்ததாக, அரசு ஊழியர்கள் உள்ளிட்ட 17 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2003-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2009-ம் ஆண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

21 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில், சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி காமினி லாவ் நேற்று தீர்ப்பு அளித்தார். பி.கே.துங்கன், தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்பது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சி.பி.ஐ. நிரூபிக்க தவறிவிட்டது என்று கூறி, அவர் உள்பட அனைவரையும் விடுதலை செய்தார்.

Similar News