செய்திகள்
உ.பி.யில் 3 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - மீண்டெழுமா எதிர்க்கட்சிகள்?
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் முடிவடைய உள்ளதால் தேர்தல் நடத்த மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி, உள்ளாட்சி தேர்தலுக்கான தேதிகள் அம்மாநில தேர்தல் ஆணையத்தால் இன்று அறிவிக்கப்பட்டன.
438 நகராட்சிகள், 202 பஞ்சாயத்து மற்றும் 16 மாநகராட்சி இடங்களுக்கு நடைபெற உள்ள தேர்தலில் சுமார் 3 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதில் அயோத்யா நகர் மற்றும் மதுரா-பிருந்தாவன் நகர் ஆகிய இரு இடங்கள் புதிதாக அறிமுகமாகி உள்ளன.
அதன்படி, நவம்பர் 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி டிசம்பர் ஒன்றாம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு உள்ளாட்சி தேர்தலில் கடும் சவால்கள் காத்திருக்கின்றன. மேலும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி மற்றும் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியினரும் போட்டியிட உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
கடந்த 2012-ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தமுள்ள 12 மாநகராட்சி மேயர் இடங்களில் பா.ஜ.க. 10 இடங்களை பிடித்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.