செய்திகள்

உ.பி கோரக்பூர் மருத்துவமனையில் தொடரும் துயரம் - 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணம்

Published On 2017-08-30 02:45 GMT   |   Update On 2017-08-30 02:45 GMT
உத்தரபிரதேசம் கோரக்பூர் மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் மரணமடைந்துள்ள நிலையில், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட தொற்று நோய்களால் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், மேலும், ஒரு துயரமாக அதே மருத்துவமனையில் கடந்த 48 மணி நேரத்தில் 42 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. மூளையழற்சி, ஒவ்வாமை, நிம்மோனியா காய்ச்சல், சீழ்பிடிப்பு போன்ற காரணங்களால் தான் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை முதல்வர் பி.கே.சிங் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக மருத்துவமனை வளாகங்கள் தண்ணீரால் மூழ்கியதாலும், அதிகம் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாலும் சரியான சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு மாதத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒரே மருத்துவமனையில் மரணமடைந்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.
Tags:    

Similar News