செய்திகள்

கொல்கத்தா: டி.வி. நடிகை பலியான வழக்கில் நடிகர் கைது

Published On 2017-07-07 05:04 GMT   |   Update On 2017-07-07 05:04 GMT
தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் கொல்கத்தாவைச் சேர்ந்த டெலிவி‌ஷன் நடிகை பலியானார். இந்த வழக்கில் வங்காள நடிகர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.
கொல்கத்தா:

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிரபல மாடல் அழகியும் நடிகையுமான சோனிகா சவுகான். டி.வி.யில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குபவராக இருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 29-ந்தேதி அதிகாலை 3.30 மணிக்கு இவர் கொல்கத்தாவில் ஒரு ஓட்டலில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு வெளியே வந்தார். அப்போது அதே ஓட்டலில் நடந்த மற்றொரு விருந்தில் கலந்து கொண்ட வங்காள நடிகர் விக்ரம் சட்டர்ஜி காரில் வேகமாக வந்தார்.

கார் தாறுமாறாக ஓடி நடைபாதையில் சென்றது. இதில் நடந்து சென்ற நடிகை சோனிகா சவுகான் படுகாயம் அடைந்து பலியானார். நடிகர் விக்ரம் சட்டர்ஜியும் காயம் அடைந்தார்.

இது தொடர்பாக நடிகர் விக்ரம் சட்டர்ஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சம்பவத்தின் போது குடிபோதையில் இருந்ததாகவும் அதிவேகமாக கார் ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தினர். இதில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.



ஆனால் போலீசார் நடிகர் விக்ரம் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி வந்தனர். அவரை காப்பாற்ற முதல்-மந்திரி மம்தா பானர்ஜி முயற்சி செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

இந்த நிலையில் சம்பவம் நடந்த 2 மாதத்துக்கு பின்பு இன்று அதிகாலை நடிகர் விக்ரம் கைது செய்யப்பட்டார். போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால் 2 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை கிடைக்க சட்டத்தில் இடம் உள்ளது.
Tags:    

Similar News