செய்திகள்

சிறுமியாக இருந்தபோதே திருமணம்: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்திய பெண்

Published On 2017-07-01 09:56 GMT   |   Update On 2017-07-01 09:56 GMT
சிறுமியாக இருந்தபோதே திருமணம் செய்துகொண்ட பெண், அவரது கணவரின் உதவியுடன் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளார்.
ஜெய்ப்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கரேரி கிராமத்தை சேர்ந்தவர் ரூபா. இவரது தந்தை, ரூபாவுக்கு எட்டு வயதிலேயே சங்கர்லால் என்பவரை திருமணம் செய்துவைத்தார்.

சிறு வயதிலேயே திருமணம் செய்தாலும், ரூபாவுக்கு படிப்பில் ஆர்வம் குறையவில்லை. சங்கர்லால் விவசாயியாக வேலை செய்துவந்தாலும், மனைவிக்கு தேவையான புத்தகங்களை வாங்கி தந்து, படிப்பதற்கு ஊக்கம் கொடுத்து வந்தார்.

பத்தாம் வகுப்பில் 84 சதவீதம், 12-ஆம் வகுப்பில் 84 சதவீதம் என மதிப்பெண் எடுத்து அசத்தினார் ரூபா.

இதைதொடர்ந்து, ரூபாவின் கணவர் அவரை டாக்டராக்க வேண்டும் என விரும்பினார். தான் படிக்காவிட்டாலும் தனது மனைவி டாக்டர் என்பதில் பெருமை அடையலாம் என்பதால் அவர் வேண்டிய உதவிகளை செய்துவந்தார்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் ரூபா அகில இந்திய அளவில் 2 ஆயிரத்து 612 ஆம் இடத்தை பிடித்து தேர்வாகி உள்ளார். அவர் எடுத்த மதிப்பெண்கள் 603.


இதுகுறித்து ரூபா கூறுகையில், “எனது கணவர் கொடுத்த ஊக்கத்தில் தான் நான் நீட் தேர்வை எழுதினேன். அதில் தேர்வானது மகிழ்ச்சியே. இதில் தேர்வாகாமல் இருந்திருந்தால், எனது கணவர் வீட்டினர் மருத்துவ நுழைவு தேர்வுக்கான பயிற்சிக்காக கோடா மாவட்டத்துக்கு அனுப்பி வைக்க முடிவு செய்திருந்தனர். தேர்வுக்காக படித்த சமயத்தில் என்னை வீட்டு வேலைகளை செய்ய அனுமதிக்கவில்லை’’ என தெரிவித்தார்.

சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டாலும், கணவர் விவசாயியாக இருந்தாலும் விடாமுயற்சியுடன் படித்து நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற ரூபாவுக்கு, அப்பகுதி மக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Tags:    

Similar News