செய்திகள்

மகாராஷ்டிர மாநிலம் கோரடி அனல் மின்நிலைய புதிய அலகுகளை திறந்து வைத்தார் மோடி

Published On 2017-04-14 08:02 GMT   |   Update On 2017-04-14 08:02 GMT
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் கோரடி அனல் மின் நிலையத்தின் புதிய அலகுகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
நாக்பூரில்:

சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த நாளையொட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாக்பூருக்கு பிரதமர் மோடி வருகை தந்தார். நாக்பூர் விமான நிலையத்தில் அவரை மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.



அம்பேத்கர் தன்னுடைய லட்சக்கணக்கான ஆதரவாளர்களுடன் புத்தமதத்தை தழுவிய புனித தலமான தீக்‌ஷ பூமிக்கு சென்று மரியாதை செலுத்திய பிரதமர், பின்னர் அங்கு அமர்ந்து சிறிது நேரம் பிரார்த்தனை செய்தார். அவருடன் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருந்தார்.



அதன்பின்னர் கோரடி அனல் மின் நிலையத்தின் புதிய அலகுகளை பிரதமர் திறந்து வைத்து அவற்றை பார்வையிட்டார். மேலும், கோரடி, சந்திரபூர் மற்றும் பார்லி ஆகிய பகுதிகளில் மொத்தம் 3230 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட 14 அலகுகளையும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ரொக்கமற்ற பரிமாற்ற முறையை ஊக்குவிக்கும் வகையில் ஏற்கனவே தொடங்கப்பட்ட ‘லக்கி கிரஹாக் யோஜனா’ மற்றும் ‘திகிதான் வியாபார் யோஜனா’ ஆகிய திட்டங்களின்கீழ், வெற்றி பெற்ற நபர்களுக்கு பரிசுபொருள் வழங்கி அவர்களுக்கு மோடி பாராட்டு தெரிவிக்கிறார்.

Similar News