செய்திகள்

மரத்தில் ஏறி தமிழக விவசாயிகள் தற்கொலை முயற்சி: டெல்லியில் பரபரப்பு

Published On 2017-03-25 13:14 IST   |   Update On 2017-03-25 13:14:00 IST
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து டெல்லியில் தொடர்ந்து 12-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தமிழக விவசாயிகளில் மூன்றுபேர் இன்று பிற்பகல் மரத்தின்மீது ஏறி தற்கொலைக்கு முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
புதுடெல்லி:

வார்தா புயல், வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும். நாடு முழுவதும் உள்ள நதிகளை இணைக்க வேண்டும். விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்தில் ‘ஹைட்ரோ கார்பன்’ எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதந்தோறும் பென்‌ஷன் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சுமார் 100 விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள்.

மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக தினமும் விதவிதமாக போராடுகிறார்கள். உத்தரப்பிரதேசம், பஞ்சாப், அரியானா உள்பட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து இந்தப் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். எனினும், மத்திய அரசு விவசாயிகள் போராட்டத்தை கண்டுகொள்ளாமல் உள்ளது.

இந்த நிலையில், இன்று விவசாயிகள் 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று மூன்று விவசாயிகள் அங்கிருந்த மரத்தின் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போரட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க சென்ற நடிகர்கள் விஷால் மற்றும் குழுவினர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அவர்கள் இறங்கி வந்தனர்.


மேலும், ஒருவர்  இறந்தது போல் படுத்து கிடந்தார். அவருக்கு இறுதி சடங்கு நிகழ்த்துவது போல் போராட்டம் நடத்தினர். இதனால் தலைநகர் டெல்லியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News