செய்திகள்

உத்தரபிரதேசத்தில் ரெயில் பெட்டிகள் கவிழ்ந்து 2 பேர் பலி

Published On 2016-12-28 05:15 GMT   |   Update On 2016-12-28 05:15 GMT
உத்தரபிரதேசத்தில் ரெயில் தடம் புரண்டதில் 2 பேர் பலியானார்கள். 28 பயணிகள் காயம் அடைந்தனர்.

கான்பூர்:

ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் இருந்து ஜெய்ப்பூர் உத்தரபிரதேசம், பீகார் மாநிலங்கள் வழியாக மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சீல்டா நகர் இடையே ஆஜ்மீர்சீல்டர் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று வருகிறது.

வழக்கம் போல் நேற்று மதியம் 1.16 மணிக்கு இந்த ரெயில் புறப்பட்டது. இன்று காலை 6 மணி அளவில் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ரூராமேத்தா ரெயில் நிலையங்களுக்கு இடையே வந்த போது எதிர்பாராத விதமாக ரெயில் தடம்புரண்டது. இதில் ரெயிலின் அடுத்தடுத்த 14 பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதி கவிழ்ந்தன.


அப்போது ரெயில் பயணிகள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தனர். ரெயில் கவிழ்ந்ததும் பெட்டிகள் பயங்கரமாக குலுங்கியது. பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். இதில் 2 பேர் பலியானார்கள். 28 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனே மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்தில் ரெயிலின் முதல் 5 பெட்டிகள் மிக மோசமாக சேதம் அடைந்தன. அதில் இருந்த பயணிகள்தான் அதிக அளவில் காயம் அடைந்தனர்.

விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ரெயில் மந்திரி சுரேஷ்பிரபு மீட்பு பணியை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த விபத்தை தொடர்ந்து கான்பூர்- அவுரா மார்க்கத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வழியாக செல்லும் ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகிறது.

Similar News