செய்திகள்

சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் சட்ட பஞ்சாயத்து இயக்கம் அவசர மனு

Published On 2016-12-26 05:51 IST   |   Update On 2016-12-26 05:51:00 IST
தமிழகத்தில் மீண்டும் ஒரு அசாதாரண நிலை உருவாகாமல் தடுக்க சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என்று சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்தது.
புதுடெல்லி:

சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அவசர மனுவில் கூறியிருப்பதாவது:-

சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு கர்நாடக சிறப்பு கோர்ட்டு வழங்கிய தண்டனையை கர்நாடக ஐகோர்ட்டு ரத்து செய்து 4 பேரையும் விடுதலை செய்தது. இந்த விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்னும் இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஜெயலலிதா குற்றவாளியா, நிரபராதியா என்ற விடை தெரியாமலேயே கடந்த 5-ந் தேதி காலமானார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் குறிப்பாக அ.தி.மு.க.வில் பல அரசியல் சடுகுடு வேலைகள் அரங்கேறி வருகிறது.

சசிகலா கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற நடராஜன் தலைமையில் காய்களை நகர்த்தி வருகிறார். துணைக்கு தன் குடும்ப உறவினர்கள் அனைவரையும் பயன்படுத்தி வருகிறார். அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்று, பின்னர் தமிழக முதல்-அமைச்சராக சசிகலா துடிக்கிறார். இதற்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

சசிகலா முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சொத்து குவிப்பு வழக்கில், ஒருவேளை சசிகலா உள்ளிட்டோர் குற்றவாளி என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தால், சசிகலா பதவி விலக வேண்டிவரும். மீண்டும் தமிழகத்திற்கு ஒரு தலைகுனிவு ஏற்படும். ஜெயலலிதா கைது செய்யப்பட்டதற்கு எதிராக அ.தி.மு.க.வினர் செய்த அட்டூழியங்கள் மீண்டும் அரங்கேறும். தமிழக மக்கள் மீண்டும் பாதிக்கப்படுவார்கள். பல கோடி மதிப்புள்ள பொதுச்சொத்துகள் சேதமாக்கப்படும்.

ஏற்கனவே புயல், முதல்- அமைச்சர் மரணம் என்ற பல்வேறு காரணங்களால் அசாதாரண சூழல் நிலவிவரும் தமிழகத்தில் மேலும் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு நடக்காமல் தடுக்கவேண்டியது அவசியமாகிறது.

தமிழகத்தில் நிலவிவரும் இந்த சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு சுப்ரீம் கோர்ட்டு சொத்து குவிப்பு வழக்கின் மீதான தீர்ப்பை விரைவாக வழங்க வேண்டும் என சட்ட பஞ்சாயத்து இயக்கம் சுப்ரீம் கோர்ட்டை கேட்டுக்கொள்கிறது.

மத்திய அரசின் தலையீட்டால்தான் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும், நீதிபதிகளுக்கு பல கோடி லஞ்சம் கொடுத்து வழக்கு சரிசெய்யப்பட்டுள்ளது என்றும் வதந்திகள் உலவிவருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் சுப்ரீம் கோர்ட்டு உடனே சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கி நீதித்துறையின் மீதான நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Similar News