செய்திகள்

பிடல் காஸ்ட்ரோ மரணம்: ஜனாதிபதி, பிரதமர், சோனியா இரங்கல்

Published On 2016-11-26 07:57 GMT   |   Update On 2016-11-26 08:16 GMT
கியூபா நாட்டின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
புதுடெல்லி:

கியூபாவில் ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்காலம், பிரதமராகவும், அதிபராகவும் பதவி வகித்தவர் பிடல் காஸ்ட்ரோ. இவர் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் நேரடி மோதல்கள் வெடித்தது.

உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டு இருந்த பிடல் காஸ்ட்ரோ கியூபா நேரப்படி இரவு 10.30 மணியளவில் உயிரிழந்தார். 90 வயதான பிடல் காஸ்ட்ரோ உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததாக அவரது சகோதரரும் அதிபருமான ராவுல் காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

பிடல் காஸ்ட்ரோவின் மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கியூபாவின் புரட்சிகர தலைவர் மரணம் அடைந்ததற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவின் மிகச்சிறந்த நண்பர் பெடல் காஸ்ட்ரோ” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘20-ம் நூற்றாண்டின் தனித்துவம் வாய்ந்த தலைவராக விளங்கியவர் பிடல் கேஸ்ட்ரோ. ஒரு உயர்ந்த நண்பரை இழந்து இந்தியா துக்கப்படுகிறது. அவரது மறைவால் துயரப்படும் கியூபா அரசுக்கும் மக்களுக்கும் இந்த வேதனையான வேளையில் துணையாக இருப்போம் என தெரிவித்து கொள்கிறேன். பிடல் கேஸ்ட்ரோவின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்’  என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களும் பிடல் காஸ்ட்ரோ மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News