செய்திகள்

டீஸ்டாவின் வங்கிக் கணக்கை விடுவிக்கக்கோரி வழக்கு: குஜராத் அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published On 2016-08-17 09:12 GMT   |   Update On 2016-08-17 09:12 GMT
சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் வங்கி கணக்கை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு குஜராத் அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி:

குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரெயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறையில் பலர் கொல்லப்பட்டனர். குல்பர்க் சொசைட்டி என்ற இடத்தில் குடும்பத்துடன் பலர் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்துக்கு உதவ சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் ரூ.1.51 கோடி நிதி திரட்டினார்.

இந்த நிதியில் டீஸ்டாவும், அவரது குடும்பத்தினரும் மோசடி செய்து விட்டதாக புகார் வந்ததையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து அகமதாபாத் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதுடன், டீஸ்டா மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்தின் வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.

இந்த வங்கி கணக்குகளை விடுவிக்கக்கோரி டீஸ்டா மற்றும் அவரது கணவர் ஜாவேத் ஆனந்த், தொண்டு நிறுவனங்களான சப்ரங் டிரஸ்ட், நீதி மற்றம் அமைதிக்கான குடிமக்கள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் தள்ளுபடியான நிலையில், உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்களின் மனுவுக்கு குஜராத் மாநில அரசு பதில் அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதுதொடர்பாக மாநில அரசு மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நோட்டீஸ் அளித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டனர்.

மேலும் வழக்கு விசாரணை செப்டம்பர் 21-ம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது.

Similar News