செய்திகள்
ஷாருக் கானை சந்தித்த ட்விட்டர் சி.இ.ஒ. - காரணம் இதுதானா?
ஆர்யன் கான் கைதுக்கு பின் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஷாருக் கானை சந்தித்ததாக கூறி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஷார்க் கான் மகன் ஆர்யன் கான் போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் கைதாகி இருக்கும் சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. பலர் ஷாருக் கானுக்கு ஆதரவாகவும், மற்றவர்கள் அவரை புறக்கணிக்க வேண்டும் என்றும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், ட்விட்டரில் பக்த்கள் ஷாருக் கானை புறக்கணிக்க வலியுறுத்தி வரும் நிலையில், ட்விட்டர் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சி சூப்பர்ஸ்டாருடன் இருக்கிறார் எனும் தலைப்புடன் இரண்டு புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இரு புகைப்படங்களில் ஒன்று, ஷாருக் கானின் மும்பை வீட்டிலும் மற்றொரு புகைப்படம் இருவரும் தியானம் செய்யும் போதும் எடுக்கப்பட்டு இருக்கிறது. இதே புகைப்படத்தை ஜாக் டார்சி தனது ட்விட்டரிலும் பதிவிட்டு இருக்கிறார்.
வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், ஜாக் டார்சியின் பழைய ட்விட்டர் பதிவு தற்போது வைரலாகி வருவது தெரியவந்துள்ளது. இந்த புகைப்படங்களுக்கும் சமீபத்திய ஆர்யன் கான் கைதுக்கும் எந்த தொடர்பும் இல்லை. உண்மையில் இந்த புகைப்படங்கள் நவம்பர் 14, 2018 அன்று எடுக்கப்பட்டவை ஆகும்.