செய்திகள்
பேஸ்புக் முடங்க 13 வயது சீன சிறுவன் தான் காரணம் - வைரலாகும் தகவல்
பேஸ்புக் நிறுவன சேவைகள் பல மணி நேரம் முடங்கி போக இவர் தான் காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் அக்டோபர் 4 ஆம் தேதி திடீரென முடங்கி போயின. சேவைகள் முடங்கியதால், பேஸ்புக் நிறுவனர் மார்க் சூக்கர்பர் இந்திய மதிப்பில் ரூ. 52 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தார்.
பேஸ்புக் முடங்கியதற்கான காரணம் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், சீனாவை சேர்ந்த 13 வயது சிறுவன் தான் இந்த சேவைகள் முடங்க காரணம் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை முன்னணி செய்தி நிறுவனம் வெளியிட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
வைரல் தகவல் குறித்த இணைய தேடல்களில், முன்னணி செய்தி நிறுவனம் இவ்வாறு எந்த செய்தியையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. பேஸ்புக் சேவைகள் முடங்க 13 வயது சீன ஹேக்கர் தான் காரணம் என வேறு எந்த தகவலும் இணையத்தில் கிடைக்கப் பெறவில்லை.
'பேஸ்புக் நெட்வொர்க்கின் வன்பொருள் மற்றும் மென்பொருள் அமைப்புகளை மாற்றியமைக்கும் போது ஏற்பட்ட பிழை காரணமாகவே சேவைகள் முடங்கியது,' என பேஸ்புக் தனது வலைதளத்தில் குறிப்பிட்டு இருக்கிறது. அந்த வகையில் பேஸ்புக் நிறுவன சேவைகள் முடக்கத்திற்கு 13 வயது சீன ஹேக்கர் காரணம் இல்லை என உறுதியாகிவிட்டது.