செய்திகள்

ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும்- சரத்குமார்

Published On 2019-05-15 05:14 GMT   |   Update On 2019-05-15 06:20 GMT
ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால்தான் நல்ல திட்டங்களை கொண்டுவர முடியும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.

வேலாயுதம்பாளையம்:

அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நொய்யல் குறுக்குசாலை, குப்பம், க. பரமத்தி உள்ளிட்ட பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் தொலைநோக்கு பார்வையுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி நடத்தி வருகிறார். அ.தி.மு.க.வை யாராலும் அவ்வளவு சீக்கிரம் அசைத்துவிட முடியாது. ஸ்டாலினாலும் அது முடியாது. அவர்கள் சுயநலவாதிகள் தி.மு.க.வினர் ஊழல் செய்தார்கள்.

மே 23-ந்தேதிக்கு மேல் ஆட்சிக்கு வந்து விடலாம் என கனவு காண்கிறார்கள். நீங்கள் ஒரு நாற்காலி வாங்கி, அவருடைய வீட்டுக்கு அனுப்பிவிடுங்கள். அதில் முதல்-அமைச்சர் பதவி என எழுதி வீட்டிலேயே அமர்ந்து கொள்ளலாம். அவர் முதல்வராவது எந்த காலத்திலும் நடக்காது. ஒரு தலைவன் மக்களை பற்றி சிந்திக்க வேண்டும். ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைப்பவர் தலைவராக முடியாது.

 


நீங்கள் ஒருவருக்கு ஓட்டு போடுவீர்கள். அவர் வேறு கட்சிக்கு சென்றுவிடுவார். உங்களிடம் கேட்டுவிட்டா சென்றார். கொள்கை பிடிப்பு இல்லாமல் பல கட்சிகளுக்கு தாவிய செந்தில்பாலாஜி பொய்யான வாக்குறுதிகளை தந்து கொண்டு இருக்கிறார். ஆளுங்கட்சிக்கு வாக்களித்தால் தான் மக்களுக்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும்.

ஜெயலலிதா ஆட்சியில் வறட்சியை எதிர்கொள்ளும் வகையில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை ஒவ்வொரு வீட்டிலும் கட்ட வேண்டும் என கூறி, மழைநீரை பூமிக்கடியில் சேமித்து நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகுத்தார். அவரது வழியில் எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்கள் தூர்வாருவது உள்ளிட்டவற்றால் விவசாயிகளுக்க உதவிகரமாக இருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி இன்னும் 2 ஆண்டுகள் தொடரும். 38 பாராளுமன்ற தேர்தலிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அ.தி.மு.க. வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News