செய்திகள்

துரைமுருகன் வீட்டில் சோதனை: பணப்பட்டுவாடாவை தடுத்தால் தோல்வி பயம் என்பதா?- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2019-03-31 11:13 GMT   |   Update On 2019-03-31 11:13 GMT
துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அதை தடுத்தால் தோல்வி பயம் என்பதா? என்று பொன். ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். #ponradhakrishnan #duraimurugan

நாகர்கோவில்:

தி.மு.க. பொருளாளர் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள சூழ் நிலையில் நடத்தப்பட்ட இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கைக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் மற்றும் எதிர்கட்சியினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இதுபற்றி கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி பாரதீய ஜனதா வேட்பாளர் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

துரைமுருகனின் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். அவர்கள் பணத்தை குவித்து வைப்பார்கள். அவற்றை வினியோகமும் செய்வார்கள். அதை தடுத்தால் தேர்தலில் தோல்வி பயம் என்று கூறுவார்கள். ஊரை அடித்து உலையில் போடும் வேலையில் ஈடுபட்டால் அதை தடுக்க வேண்டியது தேர்தல் கமி‌ஷனின் கடமை. பணப்பட்டுவாடா பல இடங்களிலும் நடக்கிறது. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.

குமரி மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா, இலவச பொருட்கள் கொடுக்கும் செயல்கள் நடைபெறுகிறது. இதை தேர்தல் அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குமரி மாவட்டத்தில் சாலைகள் போடப்பட்டு உள்ளதை பெரிய பணி இல்லை என்கிறார். அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள நாங்குநேரி தொகுதியில் எத்தனை சாலைகள் போட்டுள்ளார். குமரி மாவட்டத்தில் ஏறத்தாழ 150 சாலைகள் போட்டுள்ளோம். இன்னும் பல பணிகள் நடைபெற உள்ளது. மக்கள் பிரதி நிதிக்கு இதைவிட வேறு என்ன வேலை இருக்கிறது.

நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் பாராளுமன்ற தேர்தலை சந்தித்திருக்க வேண்டும். அதுதான் முறையாக இருக்கும். 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பதாக கூறியது என்ன ஆனது என்று கேட்கிறார்கள். குமரி மாவட்ட மக்கள் தொகை 20 லட்சம். இவர்களுக்கும் நாடு முழுவதும் இருப்பவர்களுக்கும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி உள்ளோம்.

குமரி மாவட்டத்தில் உள்ள மக்களை சுய வேலை வாய்ப்பு மூலம் தொழில் அதிபர்களாக ஆக்க நினைக்கிறோம். துறைமுகம் மூலம் பல ஆயிரம் பேருக்கு அந்த திட்டத்தின் பலன் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார். #ponradhakrishnan #duraimurugan

Tags:    

Similar News