செய்திகள்

தேனி தொகுதியில் மகனுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பிரசாரம்

Published On 2019-03-20 09:16 GMT   |   Update On 2019-03-20 09:16 GMT
தேனி தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். மகனை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரத்தை தொடங்கினார். #LSPolls #TheniConstituency #OPS
அலங்காநல்லூர்:

தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலமேடு அருகே உள்ள வலையபட்டி மஞ்சமலை சுவாமி கோவிலில் ஓ.பி.எஸ். சாமி கும்பிட்டார்.

தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

பின்னர் ஓ.பன்னீர்செல்வம் திறந்த வேனில் பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மகனுக்கு ஆதரவு திரட்டினார். அப்போது ஓ.பன்னீர்செல்வத்துக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க. சார்பில் தகுதியான வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நிச்சயம் மக்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெறச் செய்வார்கள். தமிழக அரசின் சாதனைகளை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்போம்.

ராஜகண்ணப்பன் ஒரு கட்சியில் இருப்பதும், பதவி கிடைக்காவிடில் விலகுவதும் வாடிக்கை. அ.தி.மு.க.வில் எந்தவித உட்கட்சி பூசலும் இல்லை. பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் வெற்றி பெறுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #TheniConstituency #OPS

Tags:    

Similar News