சின்னமனூரில் சிறுமியை எரித்து கொல்ல முயன்ற சிறுவன் கைது
- பாலியல் தொல்லை கொடுத்ததால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டதால் அவர் மீது தீ வைத்துவிட்டு சிறுவன் ஓடிவிட்டான்.
- சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி அங்குள்ள பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அதேபகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்ளே புகுந்தான்.
அங்கு யாரும் இல்லாததால் சிறுவன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி பயத்தில் கூச்சலிட்டார்.
சத்தம் போட்டதால் ஆத்திரமடைந்த சிறுவன் பேப்பரை எடுத்து தீவைத்து சிறுமி மீது போட்டான். இதில் ஆடை தீப்பற்றி எரிந்து சிறுமியின் உடல் கருகியது. வலி தாங்கமுடியாமல் சிறுமி கதறியதால் அவன் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டான். அக்கம்பக்கத்தினர் ஒன்றுகூடி சிறுமியை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து பதுங்கியிருந்த சிறுவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.