உள்ளூர் செய்திகள்

வீட்டில் 10 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

Published On 2023-07-10 13:09 IST   |   Update On 2023-07-10 13:09:00 IST
  • பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.
  • குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காரிமங்கலம்,

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த பேகாரஅள்ளி பஞ்சாயத்து சவுளூர் கிராமத்தில் வசித்து வரும் கூலி தொழிலாளி அருள் (வயது31).

இவர் பெங்களுரில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஜீன் மாதம் 6-ந் தேதி ஊருக்கு வந்த அருள் தனது குழந்தைக்கு உடல் நலம் சரியில்லாததால் மனைவி குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு தருமபுரியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார்.

அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அருளின் வீட்டு கதவை உடைத்து பீரோவில் இருந்த தங்க செயின், மோதிரம், கம்மல் என சுமார் 10 பவுன் தங்க நகை கொள்ளை போனது.

இது குறித்து காரிமங்கலம் போலீசில் அருள் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் தலைமையில் போலீசார் பேகாரஅள்ளி கூட்டுரோடு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

அப்போது அவர் கிருஷ்ணகிரி மாவட்டம், பனந்தூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (26) என்பதும், கடந்த 6-ந் தேதி அருள் வீட்டில் 10 பவுன் தங்க நகை திருடியதும் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து போலீசார் குற்றவாளி கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

காரிமங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பேக்கரி கடையில் சி.சி.டி.வி. காமிரா, பெட்ரோல் பங்கில் ரூ.3 லட்சம் பணம், அருள் என்பவர் வீட்டில் கொள்ளை என தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளது.

இதனால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அதனால் போலீசார் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News