உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட திருமூர்த்தி மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி.

2.3 டன் ரேஷன் அரிசி கடத்திய வாலிபர் கைது; மினிலாரி பறிமுதல்

Published On 2023-06-14 14:51 IST   |   Update On 2023-06-14 14:51:00 IST
  • 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள், 2 ஆயிரம் கிலோ குருணை அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது.
  • கோழி பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் பகுதியில் மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு செல்வதாக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் மதுக்கூர் முக்கூட்டு சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மினி லாரியை வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் 350 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் , 2000 கிலோ குருணை அரிசி மூட்டைகள் என மொத்தம் 2.3 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து மினி லாரியை ஓட்டி வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அதில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த திருமூர்த்தி (வயது 24 ) என்பதும், பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசிகளை வாங்கி அதனை பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள மீன் மற்றும் கோழிப் பண்ணை தீவனத்திற்காக மினி லாரியில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து ரேஷன் அரிசி கடத்தி வந்த திருமூர்த்தியை கைது செய்தனர். மேலும் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் மினி லாரியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News