நாமகிரிப்பேட்டையில் ரூ.1.10 கோடிக்கு மஞ்சள் ஏலம்
- ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது.
- பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.
ராசிபுரம்:
ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகம் நாமகிரிப்பேட்டையில் உள்ளது. இங்கு நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்திற்கு நாமகிரிப்பேட்டை, அரியாக் கவுண்டம்பட்டி, ஒடுவன்குறிச்சி, தொப்பபட்டி, புதுப்பட்டி, நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி, பேளுக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மஞ்சளை ஏலத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில் ஒடுவன்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, ஈரோடு, சேலம், ஆத்தூர் போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மஞ்சள் ஏலம் எடுத்தனர். இந்த ஏலத்தில் 2700 மஞ்சள் மூட்டைகள் ரூ.1 கோடியே 10 லட்சத்திற்கு ஏலம் போனது.
விரலி ரகம் 1850 மூட்டைகளும், உருண்டை ரகம் 800 மூட்டைகளும், பணங்காலி ரகம் 50 மூட்டையும் கொண்டு வரப்பட்டு இருந்தன. இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4969 முதல் அதிகபட்சமாக ஒரு குவிண்டால் ரூ.7403-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ரூ.4802-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.6100-க்கும், பணங்காலி ரகம் குறைந்த பட்சம் ஒரு குவிண்டால் ரூ.8999-க்கும், அதிகப்பட்சமாக ஒரு குவிண்டால் ரூ.13000-க்கும் ஏலம் விடப்பட்டது.
கடந்த வாரத்தை விட இந்த வாரம் அதிக அளவில் மஞ்சள் மூட்டைகள் ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.