உள்ளூர் செய்திகள்
சுரண்டையில் கிணறு வெட்டும் போது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
- தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் முருகன் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- மின்சாரம் பாய்ந்ததில் முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
நெல்லை:
சுரண்டை அருகே உள்ள முத்துமாலைபுரம் வேலப்பனூரை சேர்ந்தவர் முருகன்(வயது 53). இவர் கிணறு வெட்டும் வேலை பார்த்து வந்தார்.
நேற்று கீழ சுரண்டையில் இருந்து ஆலடிப்பட்டிக்கு செல்லும் சாலையில் தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் அவர் கிணறு வெட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
கிணற்றின் உள்ளே தேங்கி கிடந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக மின்மோட்டாரை உள்ளே வைத்து முருகன் இயக்கினார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.