நாகூரில் கனமழை காரணமாக தொழிலாளி வீடு இடிந்து விழுந்தது- அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
- தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக தொழிலாளி தங்கப்பொண்ணு என்பவரின் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது.
- சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டத்தில் நாகை, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக நாகை மாவட்டம் நாகூர் அம்பேத்கர் நகரில் வசிக்கும் தொழிலாளி தங்கப்பொண்ணு என்பவரின் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை முழுவதும் இடிந்து விழுந்தது.
இதில் தங்கபொண்ணு உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 6 பேர் வீட்டு வாசல் முன்பு நின்று கொண்டிருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
சுனாமி பேரிடர் காரணமாக தங்கபொண்ணுக்கு கடந்த 2004-ம் ஆண்டு தொண்டு நிறுவனம் சார்பில் வீடு கட்டி கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த வீடும் இடிந்ததால் வசிக்க வீடு இல்லாமல் தவித்து வருகிறார். சுனாமி மறுசீரமைப்பு திட்டத்தின்கீழ் வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.