உள்ளூர் செய்திகள்
நடுக்கடை-தண்டாளம் இணைப்பு சாலை சீரமைக்கப்படுமா?
- சாலையில் ஜல்லிக்கற்கள் முற்றிலும் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
- சாலையில் மழைநீர் தேங்கினால் பள்ளம் இருப்பது தெரியாமல் போகிறது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை கடைத்தெருவில் நடுக்கடை-தண்டாளம் இடையே திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட இணைப்பு சாலை உள்ளது.
இந்த சாலையை கட்டுமாவடி, தண்டாளம், ஆலத்தூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த சாலை சேதம் அடைந்து ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளது.மேலும் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் நடந்து செல்பவர்கள் தவறி விழுந்து அடிக்கடி காயம் அடைகின்றனர்.
இது குறித்து திட்டச்சேரி பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
எனவே பழுதான இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.