- அரூரில் மனைவி நல வேட்பு விழா நடைபெற்றது
- மனைவிகளுக்கு மாலை அணிவித்து கணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தருமபுரி மாவட்டம் அரூர் மனவளக்கலை தவ மையம் சார்பில் வாழ்க்கைப் பாதையில் இன்ப, துன்பங்களை சரி பாதியாக ஏற்றுக் கொண்டு கணவருக்காகவும், தம் குடும்பத்திற்காகவும் பல தியாகங்களை செய்து வாழ்ந்து வரும் பெண்களை போற்றும் வகையிலும், பெண்களின் பெருமைகளையும், மாண்புகளையும் உலகிற்கு உணர்த்தும் வகையில் மனைவி நல வேட்பு விழா அரூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
விழாவுக்கு ஓசூர் மண்டல தலைவர் ராஜி தலைமை தாங்கினார். செயலாளர் தங்கமணி வரவேற்று பேசினார். தலைவர் பார்த்திபன் முன்னிலை வகித்தார். விழாவில் உலக சமுதாய சேவா சங்கத் துணைத் தலைவர் உழவன் தங்கவேல், காளியம்மாள் தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். ஆழியாறு அறிவு திருக்கோயில் அறங்காவலர் அரங்க துரைராஜ் பெண்களின் பெருமை குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் 450-க்கும் மேற்பட்ட தம்பதியினர் கலந்து கொண்டனர். அப்போது பெண்களை பெருமைப்படுத்தும் வகையில் மனைவிகளுக்கு கணவன்மார்கள் மாலை அணிவித்து ரோஜா பூ மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட பழங்களை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மனைவிகளிடம் கணவன்மார்கள் அன்பை பரிமாறிக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிபுரம் பேராசிரியர் பழனிசாமி மற்றும் மனவளக் கலை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சிற்றரசு நன்றி கூறினார்.