உள்ளூர் செய்திகள்

மசினகுடியில் 323 பயனாளிகளுக்கு ரூ.8.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Published On 2023-03-08 14:59 IST   |   Update On 2023-03-08 14:59:00 IST
  • பழங்குடியின மக்களுக்கான குறைதீா் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
  • சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

ஊட்டி,

நீலகிரியில் பழங்குடியின மக்களுக்கான குறைதீா் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மசினகுடியில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக ஆ.ராசா எம்.பி. கலந்து கொண்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

இதில் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 141 பயனாளிகளுக்கு ரூ.6.98 கோடி மதிப்பில் புதிய வீடுகள் கட்டுவதற்கான ஆணை, 9 பயனாளிகளுக்கு ரூ.36 ஆயிரம் மதிப்பில் தேன்பெட்டிகள், 44 பயனாளிகளுக்கு நலவாரிய அட்டைகள் வழங்கப்பட்டது.

இதேபோல் 27 பயனாளிகளுக்கு வன உரிமை அமைப்புச் சட்டம் 2006-ன் கீழ் தனி நபா் உரிமை வழங்குதல் ஆணை, ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு ரூ. 4.80 லட்சம் மதிப்பில் ஆணை களும் வழங்கப்பட்டது.

வருவாய்த் துறை சாா்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1.13 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, மாவட்ட வழங்கல் துறை சாா்பில் 33 பயனாளிகளுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பில் புதிய குடும்ப அட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.1.26 லட்சம் மதிப்பில் முதியோா் உதவித்தொகை, வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.11.64 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார திட்டம் சாா்பில் 10 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.37.50 லட்சம் மதிப்பில் தொழில் தொடங்க கடனுதவி என மொத்தம் 323 பயனாளிகளுக்கு ரூ.8.04 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் ஊரக வளா்ச்சி முகமை திட்டத்தின் திட்ட அலுவலா் உமா மகேஸ்வரி, ஊட்டி கோட்டாட்சியா் துரைசாமி, பழங்குடி மக்கள் மற்றும் அனைத்து துறை அலுவலா்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

Tags:    

Similar News