உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த முதிய தம்பதி.

மகளுக்கு எழுதிக்கொடுத்த வீட்டை திரும்ப வாங்கி தரவேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் முதிய தம்பதி கண்ணீர் மனு

Published On 2022-10-17 08:42 GMT   |   Update On 2022-10-17 08:42 GMT
  • கலெக்டர் அலுவலத்திற்கு அனைத்து இந்திய மகளிர் சங்கத்தினர் திரண்டு வந்து மனு அளித்தனர்.
  • மாணிக்கம், மேரிபொன்னம்மாள் இன்று கண்ணீருடன் வந்து ஒரு மனு கொடுத்தனர்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலத்திற்கு அனைத்து இந்திய மகளிர் சங்கத்தினர் திரண்டு வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

100 நாள் வேலை

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்காக வழங்கப்படும் ரூ. 251 ஊதியத்தை முறையாக வழங்க வேண்டும்.

இத்திட்டத்தை பேரூராட்சி, நகராட்சிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும். 100 நாள் வேலைவாய்ப்பு தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் சங்கர்நகர் பகுதியில் திருமண மண்டபம் திறக்கவேண்டும் என வலியுறுத்தி இருந்தனர்.

கண்ணீருடன் மனு

அபிஷேகப்பட்டி அருகே உள்ள வெள்ளாளங்குளம் வேதக்கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது74). இவரது மனைவி மேரிபொன்னம்மாள் (74). இவர்கள் இன்று கண்ணீருடன் வந்து ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அதில் இளைய மகளை தஞ்சாவூரில் திருமணம் செய்து கொடுத்துள்ளோம். எங்களை நல்லமுறையில் கவனித்து கொள்வார் என்ற எண்ணத்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு எங்களுக்கு சொந்த–மான வீட்டை அவருக்கு நன்கொடை யாக பத்திரப்பதிவு செய்து கொடுத்தோம்.

ஆனால் வீட்டை வாங்கிய பின்னர் அவர் எங்களை சரிவர கவனிக்காமல் இருந்தனர். மேலும் வீட்டை விட்டு எங்களை வெளியே அனுப்பிவிட்டனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுத்து வீட்டை எங்களுக்கு மீண்டும் திரும்ப வாங்கி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

உதவித்தொகை

பாளையஞ்செட்டி குளத்தை சேர்ந்த கள்ளத்தி ராஜா என்பவரின் மனைவி பிரதீபா, தனது குழந்தையுடன் வந்து கொடுத்த மனுவில், எனது கணவருடன் நாங்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது ஆம்புலன்ஸ் மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த எனது கணவர் படுத்த படுக்கையாக உள்ளார். எனவே அவரது மருத்துவ சிகிச்சை மற்றும் வாழ்வாதாரத்துக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

Tags:    

Similar News